செய்திகள்
முருங்கை

முருங்கை சாகுபடியில் ஆர்வம் காட்டும் திருப்பூர் விவசாயிகள்

Published On 2021-05-04 11:38 GMT   |   Update On 2021-05-04 11:38 GMT
சாகுபடி பணிகளுக்கு தேவையான நீர்வரத்தை திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் அளித்து வருவதால் திருப்பூர் விவசாயிகள் முருங்கை சாகுபடியில் உற்சாகத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சாகுபடி பணிகளுக்கு தேவையான நீர்வரத்தை திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் அளித்து வருகிறது.

அவற்றை ஆதாரமாக கொண்டு தென்னை, வாழை, கரும்பு, மா, முருங்கை உள்ளிட்டவற்றையும் காய்கறிகள், கீரைகள், தானியங்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தளிப்பகுதியில் விவசாயிகள் முருங்கை சாகுபடியில் உற்சாகத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.

முருங்கையில் செடிமுருங்கை மற்றும் மரமுருங்கை என 2 வகைகள் உள்ளது. வைகாசி பட்டம் முருங்கை சாகுபடிக்கு ஏற்றது. ஏப்ரல் மாதத்தில் விதைகளை நடவு செய்தால் நடவு செய்தலில் இருந்து 6வது மாதம் அதாவது நவம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனற்று போகும். அதனால் முருங்கை செடிகளின் தலைப்பகுதியை கிள்ளி விட்டால் கூடுதலாக கிளைகள் வளர்ந்து அதிக அளவு விளைச்சலை கொடுக்கும். இதனால் வருமானமும் கூடுதலாக கிடைக்கும். அதற்கு முறையான பராமரிப்பு அவசியம். செடிகளுக்கு மண் அணைத்தல், உரமிடுதல், பூச்சிகளை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை குறித்த நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். ஊடுபயிராக தர்பூசணி, மிளகாய், தக்காளி, வெண்டை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்யலாம்.

இதனால் கூடுதல் வருமானம் ஈட்ட இயலும். அனைத்து விதமான மருத்துவ குணங்களும் நிறைந்த மூலிகை முருங்கை. இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்காய், கீரை, பூ என அனைத்தும் உடல் நலனுக்கு நன்மையை தருகிறது. வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் இருந்தால் அனைவரும் எந்தவித நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் இன்றைய எந்திர உலகத்தில் அதற்கு சாத்தியமில்லை. அதனால் தான் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். சமீபகாலமாக அன்றாட உணவில் முருங்கையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முருங்கைக்கு ஓரளவுக்கு நிலையான விலை கிடைத்து வருகிறது. இதனால் முருங்கையை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News