செய்திகள்
கொலை

க.பரமத்தி அருகே விவசாயி காருடன் வைத்து உயிரோடு எரித்துக்கொலை

Published On 2019-11-06 14:41 GMT   |   Update On 2019-11-06 14:41 GMT
க.பரமத்தி அருகே விவசாயி ஒருவர் காருக்குள் வைத்து கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.பரமத்தி:

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள வேலம் பாளையம் எட்டியபரப்பு பகுதியில் உள்ள மண்சாலையில் இன்று அதி காலை ஒரு கார் எரிந்த நிலையில் நின்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காரின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அந்த காருக்குள் பின் இருக்கையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இதுபற்றி க.பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் சம்பவ இடம் விரைந்தார். பின்னர் நடத்திய விசாரணையில் காருக்குள் பிணமாக கிடந்தவர் நொய்யல் குறுக்குச் சாலை பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி (வயது 48) என்பது தெரியவந்தது. விவசாயியான இவர் நேற்று தனக்கு சொந்தமான நிலத்தினை விற்று பணத்தை வீட்டில் கொடுத்துவிட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரை மர்ம நபர்கள் காருக்குள் வைத்து உயிருடன் எரித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்று முழுமையாக தெரியவில்லை. நிலம் விற்ற பணத்தை முழுமையாக அவர் வீட்டில் சேர்த்தாரா? அல்லது வேறு யாருக்காவது கொடுத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். நிலம் விற்ற பணத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. கொலையாளிகளை போலீசார் நெருங்கி விட்டனர். கொலை தொடர்பாக ரெங்கசாமியின் குடும்பத்தினரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
Tags:    

Similar News