செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

பாஜக தலைவர்களின் நிகழ்ச்சிகளை குறிவைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள்

Published On 2021-07-11 14:04 GMT   |   Update On 2021-07-11 14:04 GMT
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், விவசாயிகளின் கோபம் பாஜக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் திரும்பி உள்ளது.
அரியானா:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 6 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களில் இருந்தும் சிலர் பங்கேற்றுள்ளனர். 

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், விவசாயிகளின் கோபம் பாஜக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் திரும்பி உள்ளது. 



பாஜக ஆளும் அரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள், கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக நேற்று முதல் 
விவசாயிகள் போராட்டம்
 நடத்தி வருகின்றனர். பாஜக மற்றும் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி தலைவர்களின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நடத்த அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது.

நேற்று யமுனாநகர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் மூல்சந்த் சர்மாவின் பொதுக்கூட்டத்தை குறிவைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஹிசார் மாவட்டத்தில் மாநில பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் தங்கார் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

இன்று பதேகாபாத் மாவட்டத்தில் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் பன்வாரி லால், ஒரு கூட்டத்தில் பங்கேற்றபோது விவசாயிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதேபோல் ஜஜ்ஜார் பகுதியில் அரவிந்த் சர்மா எம்பி, பகுதி பொறுப்பாளர் வினோத் தாவ்டே, ஓம் பிரகாஷ் தங்கார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை குறிவைத்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

இந்த கூட்டம் நடைபெறும் இடத்தை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் அங்கு குவிந்த விவசாயிகள், போலீசார் அமைத்திருந்த பேரிகார்டுகளையும் தள்ளிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுத்த போலீஸ்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
Tags:    

Similar News