செய்திகள்
கோப்புபடம்

திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி ஆசிரியர் பலி - மகளை கல்லூரியில் சேர்க்க சென்றபோது விபத்து

Published On 2021-07-17 15:07 GMT   |   Update On 2021-07-17 15:07 GMT
திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி ஆசிரியர் பலியானார். மகளை கல்லூரியில் சேர்க்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
திண்டிவனம்:

திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 56). இவர், அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

இவரது மகள் யாசினி(வயது 24). இவரை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக ரவி நேற்று அதிகாலையில் காரில் புறப்பட்டார். அண்டபள்ளத்தை சேர்ந்த குப்பன் மகன் அருள்(29) என்பவர் காரை ஓட்டினார்.

செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள ராகவேந்திரா கோவில் அருகில் அதிகாலை 4 மணிக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உடல் நசுங்கி ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். யாசினி, அருள் ஆகிய 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்து பற்றி அறிந்ததும் ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News