செய்திகள்
கொல்கத்தா முன்னாள் மேயர் பாஜகவில் இணைந்தார்
மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மேலும் ஒரு எம்.எல்.ஏ. இன்று பாஜகவில் இணைந்தார்.
புதுடெல்லி:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் பாஜக அதிக இடங்களைப் பிடித்துள்ளது.
இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொல்கத்தா நகரின் முன்னாள் மேயரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் எல் ஏவுமான சோவன் சாட்டர்ஜி இன்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோவன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பாஜக மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் உள்பட பலர் பங்கேற்றனர்.