செய்திகள்
கோப்பு படம்

கோவாக்சின் தடுப்பூசி 60 சதவீத செயல்திறன் உடையதாக இருக்கும் - பாரத் பயோடெக் நம்பிக்கை

Published On 2020-11-22 10:18 GMT   |   Update On 2020-11-22 11:07 GMT
பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள்ள கோவாக்சின் தடுப்பூசி 60 சதவீதம் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பலநாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசியின் 2 கட்ட பரிசோதனைகளிளும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது 3-ம் கட்ட பரிசோதனை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் 26 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி குறைந்தபட்சம் 60 சதவீதம் செயல் திறன் கொண்டதாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. 

சுவாசம் தொடர்பான தடுப்பூசிகள் 50 சதவீதம் வெற்றி அடைந்தாலே அதற்கு உலக சுகாதார மையம், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவை அனுமதி வழங்குவதாகவும், கொரோனா தடுப்பூசியை 60 சதவீதம் வெற்றி அடைய வைக்க முயற்சித்து வருவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, அமெரிக்க மருந்து நிறுவனங்களான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 90 சதவீத செயல்திறனும், மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 சதவீத செயல்திறனும் கொண்டதாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News