செய்திகள்
வைகை அணை

வைகை அணையில் இருந்து 7200 கன அடி நீர் வெளியேற்றம்- கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு

Published On 2021-11-26 04:37 GMT   |   Update On 2021-11-26 04:37 GMT
வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் 7200 கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் 5 மாவட்டங்களில் வைகை கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணைக்கு வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஆதாரமாக உள்ளது.

இங்கு கடந்த 2 நாட்களாக கொட்டி வரும் கனமழை காரணமாகவும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கூடுதல் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர் மட்டத்தை 69.50 அடியில் நிலை நிறுத்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.65 அடியாக உள்ளது. அணைக்கு 4445 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து அதிகாலை முதல் 5915 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் 8 மணியில் இருந்து 7200 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இந்த நீர் வைகை ஆறு, வாய்க்கால், 58-ம் கால்வாய் வழியாக செல்கிறது. இதனால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பு 5741 மி.கன அடியாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று பகலில் தொடங்கிய மழை இரவு வரை பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பெரியாறு 29.8, தேக்கடி 38, கூடலூர் 52.7, சண்முகாநதி அணை 51.2, உத்தமபாளையம் 50.3, வீரபாண்டி 78.6, வைகை அணை 48, மஞ்சளாறு 48, மருதாநதி 54.8, சோத்துப்பாறை 29, கொடைக்கானல் 33.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 141.65 அடியாக உள்ளது. வருகிற 30-ந் தேதி வரை 142 அடிக்கு கீழ் தேக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது கேரள பகுதிக்கு 814 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து 3623 கன அடி. அணையில் இருந்து மின் உற்பத்திக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 500 கன அடியும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7572 மி.கன அடியாக உள்ளது.
Tags:    

Similar News