செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க அலுவலர் நியமனம்
கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவுவதால் அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவுவதால் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வித பிரச்சினைகள் இன்றி தங்குவதற்கும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்ரமணியன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலராக தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) விமலாவும், குழு உறுப்பினர்களாக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குருநாதன், முத்திரை ஆய்வாளர் ராஜா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து கண்காணிப்பு அலுவலரை 9942832724 என்ற செல்போன் எண்ணிலும், குழு உறுப்பினர்களை 9629494492, 7904250037 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.