பெண்கள் உலகம்
ஆண்களால் புரிந்து கொள்ள முடியாத பெண்களின் பழக்கவழக்கங்கள்

ஆண்களால் புரிந்து கொள்ள முடியாத பெண்களின் பழக்கவழக்கங்கள்

Published On 2022-02-10 03:35 GMT   |   Update On 2022-02-10 03:35 GMT
ஒப்பனை, ஆடை அலங்காரத்தை முடித்த பிறகு கணவரின் கருத்தை எதிர்பார்ப்பார்கள். எப்போதும் போல் இயல்பாக கிளம்பும் கணவருக்கு மனைவியின் எதிர்பார்ப்பு சட்டென்று புரியாது.
பெண்களின் ஒரு சில பழக்கவழக்கங்கள் ஆண்களுக்கு புரியாத புதிராகவே அமைந்திருக்கும். கணவன் - மனைவி இடையே ஒருமித்த புரிதல் இருந்தாலும் கூட மனைவி பின்பற்றும் சில பழக்கவழக்கங்களை கணவரால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை செயல்படுத்தியே தீர வேண்டும் என்பதில் விடாப்பிடியாகவும் இருப்பார்கள். அதை கூட சில ஆண்களால் யூகிக்க முடியாது. அன்றாட பழக்க வழக்கங்களிலும் அதனை நடைமுறைப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் சிலவற்றை பார்ப்போமா?

* வெளி இடங்களுக்கோ, சுப நிகழ்ச்சிகளுக்கோ புறப்பட தயாராகும் முன்பு ஒப்பனைக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் அலங்காரத்திற்கு செலவிடும் நேரத்தை பார்த்து ஆண்கள் சலித்துப்போவதுண்டு. அந்த அளவுக்கு அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கூட திருப்திப்பட்டுக்கொள்ள மாட்டார்கள். செல்ல வேண்டிய இடத்திற்கான தொலைவு சில நிமிட பயணமாகத்தான் இருக்கும். ஆனாலும் அங்கு சென்ற பிறகும் ஒப்பனை நேர்த்தியாக இருக்கிறதா? கலைந்துவிட்டதா? என்று சரி பார்த்துக்கொள்வார்கள். அதைப்பார்த்து ஆண்கள் குழம்பி போய்விடுவதுண்டு. ‘கொஞ்ச நேரத்திற்கு முன்புதானே வீட்டில் மேக்கப் செய்தார். அதற்குள் மீண்டும் மேக்கப் மீது கவனம் செலுத்துகிறாரே?’ என்ற கேள்வி ஆண்களிடம் எழும். ஆனால் அதற்கான பதிலை பெண்களிடம் எதிர்பார்க்க முடியாது.

* வெளியே செல்லும்போது மேக்கப் போலவே ஆடை தேர்வுக்கும் மெனக்கெடுவார்கள். அதிலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு செல்வதென்றால் புதிய ஆடை வாங்குவதற்கு சில பெண்கள் முடிவு செய்து விடுவார்கள். இத்தனைக்கும் அலமாரி நிறைய துணிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அவைகளை எடுத்து பார்த்துவிட்டு ‘எல்லாம் பழையதாக இருக்கிறது. எதுவுமே சரியில்லை’ என்பார்கள். மொத்தமே ஐந்து, ஆறு ஆடைகளை வைத்துக்கொண்டு அவற்றை அணிந்து திருப்திப்பட்டுக்கொள்ளும் கணவருக்கு மனைவியின் செயல் ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருக்கும்.

* ஒப்பனை, ஆடை அலங்காரத்தை முடித்த பிறகு கணவரின் கருத்தை எதிர்பார்ப்பார்கள். எப்போதும் போல் இயல்பாக கிளம்பும் கணவருக்கு மனைவியின் எதிர்பார்ப்பு சட்டென்று புரியாது. அதனை சூட்சுமமாக கணவரிடம் வெளிப்படுத்தவும் செய்வார்கள். அப்போதும் புரிந்துகொள்ளாவிட்டால் அதிருப்தி அடைவார்கள். ‘தான் இந்த ஆடை அலங்காரத்தில் எப்படி இருக்கிறேன்’ என்று கேட்கவும் செய்வார்கள். அதுபோல் உடல் எடை குறைந் திருக்கிறேனா? என்ற கேள்வியையும் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் இந்த கேள்வி களின் அர்த்தம் கணவருக்கு புரியாது. அதனால் மனைவியின் கேள்விக்கு தக்க பதிலை சொல்வதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

* வெளி இடங்களுக்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக கையில் பர்ஸ் வைத்திருப்பார்கள். அதில் ஒருசில அலங்கார பொருட்கள் தவறாமல் இடம் பெற்றிருக்கும். கூடவே ஒருசில பொருட்களையும் வைத்திருப்பார்கள். அவை சற்று கனமாக இருந்தால் கணவரிடம் கொடுத்துவிடுவார்கள். ஆனால் வீடு திரும்பும்வரை அந்த பொருட்களை அதிகமாக உபயோகித்து இருக்கமாட்டார்கள். பிறகு எதற்காக இவற்றையெல்லாம் எடுத்து வருகிறார் என்ற கேள்வி கணவரிடம் எழும். சில சமயங்களில் பெரிய ஹேண்ட்பேக்கை தூக்கி செல்வார்கள். ஆனால் அதில் ஒருசில பொருட்களே இடம்பெற்றிருக்கும். அதை பார்க்கும்போது பர்ஸே போதுமானது என்ற எண்ணம் ஆண்களுக்கு எழும்.

* முகத்திற்கு பொலிவு சேர்ப்பதற்கு ‘பேஸ் பேக்' போடும் வழக்கத்தை பெண்கள் பின்பற்றுவார்கள். உடனே எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் கணவரிடம் கருத்து கேட்பார்கள். இத்தனைக்கும் அதனை பயன்படுத்துவதால் பெறப்போகும் மாற்றத்தை கணவர் சட்டென்று உணர்வதில்லை. ஆனாலும் கணவரின் பதில் சாதகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனை ஆண்களால் புரிந்துகொள்ளவே முடியாது.

* வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு பெண்கள் மெனக்கெடுவார்கள். ஆண்களின் பார்வையில் வீடு சுத்தமாகத்தான் தெரியும். ஆனால் பெண்களுக்கு திருப்தி ஏற் படாது. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் மீண்டும் மீண்டும் சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். அதை பார்த்து சில ஆண்கள் குழம்புவதுண்டு.

* சமையல் அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் பெண்களுக்கு அத்துப்படி. எந்த பொருள் எந்த இடத்தில் இருக்கும் என்பதை நொடியில் கண்டுபிடித்து எடுப்பார்கள். ஆண்கள் பயன்படுத்தும் பாத்திரம் எதனையும் தவறுதலாக வேறு இடத்தில் வைத்துவிட்டால் கோபம் கொள்வார்கள். ஏதாவதொரு இடத்தில்தானே இருக்கிறது என்று ஆண்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஒரு ஆண் தான் உபயோகிக்கும் பாத்திரம், ஸ்பூன், தட்டு என அனைத்தையும் பார்த்து தெரிந்து கொள்வதற்குள்ளாகவே அவன் பசி பறந்து போய்விடும்.

* முகம், கூந்தல், கால் விரல் நகங்கள், கைவிரல் நகங்கள் என உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான கிரீம்களை பெண்கள் உபயோகிப்பார்கள். இப்படி எதற்காக தனித்தனி கிரீம்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆண்களிடம் எழும் கேள்விக்கு எளிதில் பதில் கிடைத்து விடாது.

* பெண்கள் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கும்போது நலம் விசாரிப்பார்கள். அன்பாக பழகுவார்கள். இத்தனைக்கும் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருக்கும். ஆனால் நேரில் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்களின் செய்கைகளை பார்க்கும்போது ஆண்கள் குழம்பிபோய்விடுவார்கள். நன்றாகத்தானே பேசுகிறார்கள். பிறகு ஏன் குறை சொல்லிக்கொள்கிறார்கள் என்று ஆண்களுள் எழும் கேள்விக்கான பதில் புரியாத புதிராகவே நீடிக்கும்.
Tags:    

Similar News