செய்திகள்
விண்ணப்பப் படிவம்

கிறிஸ்தவர்கள் புனிதப்பயணம் செல்ல 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2019-09-13 14:21 GMT   |   Update On 2019-09-13 14:21 GMT
கிறிஸ்தவர்கள் புனிதப்பயணம் செல்ல 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20-ம் ஆண்டின் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால், நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள். இதில் 50 கன்னியாஸ்திரிகள் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. 

இந்த புனிதப்பயணம் செப்டம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். 

இதற்கான காலக்கெடு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புனிதப்பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020'' என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். 

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News