கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் கேரட் விலை சரிவு
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை பூண்டி, பூம்பாறை, கவுஞ்சி, மன்ன வனூர் மற்றும் வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கேரட் சாகுபடி செய்யப்படுகிறது.
120 நாட்களில் விளைச்சலுக்கு வரும் இவ்வகை கேரட்டுகளை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக விளைச்சல் அதிகரித்து இருந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கேரட்டுகள் அழுகிய நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
மேலும் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் மட்டுமே விற்கப்படுவதாக கூறும் விவசாயிகள் இந்த விலை குறைவு காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , உற்பத்தி தொடக்கத்திலிருந்து உரம் வாங்குவதில் ஆரம்பித்து களையெடுப்பது , இறுதியில் காரட் விளைச்சலை எடுத்து தரம் பிரிப்பது வரை ஆகும் செலவுகளை கணக்கிடும் போது தற்போது மூலப்பொருட்களின் விலையேற்றங்களால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருதாகவும் கூறுகின்றனர்.
எனவே அரசு தலையிட்டு இது போன்ற விவசாயப் பணப்பயிருக்கு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் நஷ்டம் ஏற்படாதவாறும் அரசே கொள்முல் செய்து விவசாயிகளை காக்கவும் , நஷ்டம் ஏற்படும் காலங்களில் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.