உள்ளூர் செய்திகள்
பவானிசாகர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஒரு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஒரு யானை மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பவானிசாகர் வனசரகர் சிவகுமார் மற்றும் வன ஊழியர்கள் தெங்கு மரஹடா, பெஜலட்டி, மாயாறு என வனப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர்.
அப்போது பவானிசாகர் அருகே உள்ள காராச்சி கோரை வனப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடந்தது. அந்த யானையை ஆய்வு செய்தனர். இதில் அது பெண் யானை என தெரிய வந்தது. மேலும் அந்த யானை வாயில் ரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த யானை கீழே விழுந்து இறந்ததா? அல்லது எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.