தொழில்நுட்பம்
போலி தகவல்களை கண்டறிய பாடம் எடுக்கும் வாட்ஸ்அப் மற்றும் நாஸ்காம்
2019 பொது தேர்தலையொட்டி வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்களை கண்டறிவது பற்றி அதன் பயயனர்களுக்கு பாடம் எடுக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. #WhatsApp
இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாட்ஸ்அப் மற்றும் நாஸ்காம் பவுன்டேஷன் இணைந்து போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்க டிஜிட்டல் கல்வியறிவு வகுப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
இருநிறுவனங்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் போலி தகவல்களை கண்டறிவது மற்றும் வாட்ஸ்அப் செயலியில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.
பயிற்சியின் அங்கமாக மக்களுக்கு குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கவனமாக செயல்படுவது பற்றியும் கற்பிக்கப்பட இருக்கிறது. பயிற்சியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் உண்மையில் நடந்த சிறு கதைகள், ஃபார்வேர்டு ஆகும் தவறான குறுந்தகவல்களை எப்படி சட்ட வல்லுநர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் பன்மொழி பயன்பாடு பின்பற்றப்படுவதால், பயிற்சியை பல்வேறு மொழிகளில் நடத்த வாட்ஸ்அப் மற்றும் நாஸ்காம் திட்டமிட்டுள்ளன. இருநிறுவனங்கள் இணைந்து நடத்தும் முதல் பயிற்சி மார்ச் 27 ஆம் தேதி டெல்லியில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு பயிற்சி வகுப்புக்கள் இந்தியா முழுக்க நகர்ப்புறம், ஊரக பகுதிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட இருக்கிறது.
நாஸ்காம் பவுன்டேஷனை சேர்ந்த தன்னார்வ தொண்டு செய்யும் குழுவினரிடையே ‘Each One Teach Three’ (ஒருவர் மூவருக்கு பயிற்சியளிப்பது) எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம் ஒவ்வொருத்தரும் மூன்று பேருக்கு பயிற்சி அளிக்க உறுதியளிக்க வேண்டும்.