உள்ளூர் செய்திகள்
கடற்கரையில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
உத்தண்டி கடற்கரையில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
வடகிழக்கு மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் மதுமிதா பைத்யா. சென்னையில் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவில் உத்தண்டி ஜீசெல் அவென்யூ கடற்கரையில் தனது ஆண் நண்பர்களுடன் இருந்துள்ளார்.
இரவில் ரோந்து சென்ற போலீஸ் அதிகாரி மதுமிதாவை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்ததாகவும் அப்போது நள்ளிரவில் வடமாநிலங்களில் சுற்றுங்கள். இங்கு சுற்றாதீர்கள் என்று மரியாதை குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி மதுமிதா டுவிட்டர் பதிவிலல் குறிப்பிட்ட போது போலீசை மரியாதையாக நடக்க கற்றுக் கொடுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை சார்பிலும் டுவிட்டர் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரிக்கும் படி போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். சம்பவம் நடந்த இடம் தாம்பரம் காவல் ஆணையரக பகுதி என்பதால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.
சம்பவத்தன்று ரோந்து பணிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்தான் மதுமிதாவை எச்சரித்தது தெரிய வந்துள்ளது.
மதுமிதா கடற்கரையில் எவ்வளவு நேரம் இருக்கலாம் என்பது தனக்கு தெரியாது என்றும் இரவு 10 மணிக்கு மேல் அந்த இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நள்ளிரவு 3 மணிக்கு அந்த பகுதியில் இருந்ததாகவும் அதனாலேயே போலீசார் அங்கிருந்து வெளியேற கூறியதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
எனவே போலீசார் மதுமிதாவையும் நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடமும் விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர். மதுமிதாவையும் அழைத்து நடந்த சம்பவம், இரவில் எத்தனை மணிவரை கடற்கரையில் இருந்தார்கள்? என்கிற விபரங்களையும் கேட்டு அறிய முடிவு செய்துள்ளனர்.
நள்ளிரவில் கடற்கரையில் தனிமையில் அமர்ந்து இருந்தால் மட்டுமே போலீசார் வெளியேற சொல்வார்கள்.
தவறு போலீஸ் மீது இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.