திருத்தங்கல்லில் கஞ்சா விற்ற கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒரு தம்பதியரை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 ½ கிலோ கஞ்சா, ரூ.3,630 மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
அவர்களது பெயர் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற சிவன் (வயது 40), அவரது மனைவி சாந்தி (38) என தெரியவந்தது.
இதே போல் திருத்தங்கல் முனியசாமி காலனியைச் சேர்ந்த காமராஜ் என்ற ராஜா (23), கார்த்திகேயன் (23) ஆகியோரும் 1½ கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ.1,240 பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியலிங்காபுரத்தைச் சேர்ந்த வேலம்மாள் என்பவரிடம் இருந்து வன்னியம்பட்டி போலீசார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.