செய்திகள்
ஹரியானா: ரேசன் கடையில் உணவு தானியங்கள் வழங்கும் தானியங்கி மெஷின் அறிமுகம்
ரேசன் கடையில் பொதுமக்கள் நேரத்தை செலவழித்து நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும் என உணவு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக, ஏடிஎம் மெஷின் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின் குளிர்பானங்கள் போன்ற ஏராளமானவற்றை பணத்தை செலுத்தி தானியங்கி மெஷின் மூலம் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் ரேசன் கடை ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்க முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு தானியங்கள் வழங்கும் நாட்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நேரம் விரயமாகிறது. அத்துடன் ரேசன் கடைகளில் இருப்புகள், எடை குறைவு போன்ற புகார்களும் வருவதுண்டு.
இதையெல்லாம் போக்கும் வகையில் ஹரியானா மாநிலத்தில், உணவு தானியங்கள் வழங்கும் தானியங்கி மெஷின் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. குருகிராமில் உள்ள பரூக்நகர் ரேசன் கடையில் ஹரியானா அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
நீண்ட வரிசை, நேரம் விரயம், அளவு குறைவு போன்ற பிரச்சினைகள் இந்த மெஷின் மூலம் தீர்க்கப்படும். பயனாளர்கள் ரேசன் அட்டை அல்லது கைவிரல் ரேகை ஆகியவற்றை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவு ஆய்வாளர் சுபே சிங் தெரிவித்துள்ளார்.