செய்திகள்
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 30-ந்தேதி வரை ரத்து

Published On 2019-11-19 10:16 GMT   |   Update On 2019-11-19 12:28 GMT
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவைக்கு வருகிற 30-ந்தேதிவரை விமான சேவையை ரத்து செய்வதாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு தினந்தோறும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்று வருகின்றன.

இந்த நகரங்களுக்கு செல்லும் இந்தியன் ஏர்லைன் விமான பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக இந்த உள்ளூர் விமான சேவை நடந்து வருகிறது.

இதற்கு அலையன் ஏர் விமானங்கள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை செல்லும் விமானங்களிலும், அங்கிருந்து சென்னை வரும் விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

இதையடுத்து, இந்த நகரங்களுக்கு வருகிற 30-ந்தேதிவரை விமான சேவையை ரத்து செய்வதாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் 12 விமான சேவை ரத்தாகிறது.

இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

எனவே வருகிற 30-ந்தேதிவரை இந்த உள்ளூர் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.

எனவே இங்கு நிறுத்தப்பட்ட விமானங்கள் வெளியூர் சேவைக்கு பயன்படுத்தப்படும். தற்போது சென்னையில் இருந்து வாரம் 3 நாட்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் செல்கிறது. இந்த சேவை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News