செய்திகள்
கைது

வேன் டிரைவரிடம் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2021-11-30 10:01 GMT   |   Update On 2021-11-30 10:01 GMT
மதுரையில் வேன் டிரைவரிடம் திருட முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (41). வேன் டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் செல்போனை பறித்தார். இதனை சுரேஷ்குமார் தட்டிக் கேட்டார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த இன்னொரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி, குடிபோதை வாலிபரை மீட்டு சென்றார். வேன் டிரைவரிடம் 2 வாலிபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். துணை கமி‌ஷனர் தங்கதுரை உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமி‌ஷனர் முத்துராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கீதாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது வேன் டிரைவர் சுரேஷ்குமாரிடம் செல்போனை பறிக்க முயன்ற வாலிபர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தெப்பக்குளம் போலீசார் பெருங்குடி பர்மா காலனி வீரமணி (26), மாரியம்மன் கோவில் தெரு இருளப்பன் (21) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News