செய்திகள்
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணி மீண்டும் தொடங்கி நடைபெற்றதை காணலாம்

ஊரடங்கில் தளர்வு- கீழடி அகழாய்வு பணி மீண்டும் தொடக்கம்

Published On 2021-06-09 03:52 GMT   |   Update On 2021-06-09 03:52 GMT
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அகழாய்வு பணிகளும் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டன.
திருப்புவனம்:

பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி தெளிவுப்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு 6-ம் கட்ட அகழ்வாய்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

இந்த ஆண்டு 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடந்தன.

பாசி மணிகள், தாயக்கட்டை, காதில் அணியும் தங்க ஆபரணம், முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அகழாய்வு பணிகளும் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டன.

அதன்காரணமாக கீழடியில் நேற்று மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கின. வேலைக்கு வந்த தொழிலாளர்கள் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி அகழாய்வு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குழியில் மண் அள்ளும் பணி நேற்று நடந்தது.
Tags:    

Similar News