தேமுதிக முக்கிய நிர்வாகிகள் விருத்தாசலத்தில் குவிந்தனர்- பிரேமலதாவை ஜெயிக்க வைக்க தீவிரம்
சென்னை:
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் பிரேமலதா விஜயகாந்த் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
விஜயகாந்த் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றிபெற்ற விருத்தாசலம் தொகுதியிலேயே பிரேமலதா களம் இறங்கி உள்ளார்.
விருத்தாசலத்தில் எப்படியும் வெற்றிபெற்று விட வேண்டும் என்கிற எண்ணத்தில் பிரேமலதா காய்நகர்த்தி வருகிறார்.
இதற்காக தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் விருத்தாசலத்துக்கு பிரசாரத்துக்காக அழைத்துள்ளார்.
இதையடுத்து வெளி மாவட்டங்களில் உள்ள தே.மு.தி.க. நிர்வாகிகள் விருத்தாசலத்தில் குவிந்துள்ளனர். அவர்கள் தே.மு.தி.க. போட்டியிடும் மற்ற தொகுதிகளுக்கு செல்லாமல் விருத்தாசலம் தொகுதியில் முகாமிட்டு பிரேமலதாவை ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விஜயகாந்த் அங்கு வெற்றிபெற்ற பிறகு செய்த பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி பிரேமலதாவும், தே.மு.தி.க.வினரும் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு பிரேமலதாவுக்கு கைகொடுக்கப்போகிறது என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.