ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு

ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு

Published On 2021-01-01 08:47 GMT   |   Update On 2021-01-01 08:47 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே? இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே.
நம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வந்துள்ள பக்தர்கள் ஏராளம். அவர்கள் அனைவரையும் முதலில் வரவேற்பது வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமாக காட்சியளிக்கும் 236 அடி உயர ராஜ கோபுரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்த ராஜ கோபுரத்தை விட வரலாற்று சிறப்புமிக்கது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளை கோபுரம். இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே? இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே. 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெற்கு கோபுரமான ராஜகோபுரம் 1987ம் ஆண்டு அகோபில மடம் ஜீயரால் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுவரை இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம் தான். இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது. முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் அந்நிய படையெடுப்புகளால் ஸ்ரீரங்கம் கோவில் பலமுறை சூறையாடப்பட்டு பொன் பொருள் எல்லாம் அன்னையே படையினரால் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இருக்கிறது என்பது வரலாறு. அந்த வரலாற்றுடன் இணைந்தது தான் இந்த வெள்ளை கோபுரத்தின் வரலாறும் உள்ளது. 

அது 15ம் நூற்றாண்டு கால கட்டம். அப்போது மதுரையை ஆண்ட சுல்தான் படைகள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிப்பதற்காக வந்தன. தேவையான பொன் பொருள் எல்லாம் அகப்பட்ட பின்னரும் அந்தப் படையின் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல மனமில்லை. அதற்கு காரணம் காவிரிக்கரையில் அமைந்துள்ள இயற்கை அழகு அல்ல. அவன் மனதில் இக்கோவிலில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இன்னும் ஏராளம் இருக்கும் அவற்றையும் கவர்ந்த பின்னரே இங்கிருந்து செல்ல வேண்டுமென திட்டமிட்டான். 

இதற்காக ஒரு நாள் அல்ல பல நாள் தனது படையுடன் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டான். ஆனால் அவன் நினைத்த பொக்கிஷம் அவன் கண்களில் எளிதாக சிக்கவில்லை. இந்த நிலையில் அன்னியப் படைகளின் ஆதிக்கத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஸ்ரீரங்கம் வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த சிரமத்தை கண்டு மனம் பொறுக்காத வெள்ளையம்மாள் என்ற பெண் வெகுண்டு எழுந்தாள். இந்த வெள்ளையம்மாள் வேறு யாரும் அல்ல அவள் கோவிலில் நடனமாடி திருப்பணி செய்து வந்தாள். 

அரங்கன் மேல் உள்ள அளவற்ற பற்றின் காரணமாக பேராசை கொண்ட தளபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என திட்டமிட்டாள் வெள்ளையம்மாள். பெண்ணாசை பிடித்த அந்த தளபதி வெள்ளையம்மாளிடம் நெருங்கி பழகினான். அந்த நெருக்கத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வெள்ளையம்மாள் ஒருநாள் தளபதியிடம் ரகசியமாக பேசினாள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். 

நான் உங்களுக்கு அதை காட்டுகிறேன் பாருங்கள் என்று கையோடு அழைத்து சென்றாள் வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு. விலைமதிப்பற்ற பொக்கிஷம் இன்னும் சற்று நேரத்தில் தனக்கு கிடைக்கப்போகிறது என்ற பேராசையில் அவனும் பின் தொடர்ந்து படிகளில் ஏறினான். வெள்ளை கோபுரத்தின் உச்சியை அடைந்ததும் வெள்ளையம்மாள் அந்த தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிட்டாள். இதில் மண்டை உடைந்து நொறுங்கி தளபதி ஒழிந்தான். 

ஆனால் அவன் படைகள் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று கருதிய வெள்ளையம்மாள் மேலே இருந்து குதித்து தனது உயிரையும் மாய்த்துக்கொண்டாள். இதுதான் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு. அரங்கனின் பொக்கிஷத்தை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாகவே அந்த கோபுரம் இன்றுவரை வெள்ளை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது வெள்ளையம்மாளின் தியாகத்தை உணர்த்துவதாக.
Tags:    

Similar News