உள்ளூர் செய்திகள்
திறப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவி விவேகானந்தபுரம் வந்த போது எடுத்த படம்.

ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்ட அவைக் கூடத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்

Published On 2022-01-20 10:43 GMT   |   Update On 2022-01-20 10:43 GMT
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற பெயரில் புதிய அவைக்கூடம் கட்டப்பட்டுஉள்ளது.

இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கேந்திர பொதுச்செயலர் பானுதாஸ் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டு உள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற அவைக்கூடத்தையும் அன்னபூரணா என்ற பெயரில் கட்டப்பட்டு உள்ள உணவருந்தும் கூடத்தையும் திறந்து வைத்துபேசினார்.

விழாவில் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம தலைவர் சுவாமிசைதன்யானந்த ஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். முடிவில் கேந்திர பொதுச்செயலர் பானு தாஸ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பகல் 1-30 மணிக்கு கார் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Tags:    

Similar News