மேட்டுப்பாளையம் அருகே ரோட்டை கடந்து சென்ற யானைகளால் பொதுமக்கள் பீதி
மேட்டுப்பாளையம்:
கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதிகளை விட்டு வெளியேறி வனத்தையொட்டி உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
இதுதவிர ஊர்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. சிறுமுகை பகுதியில் மூடப்பட்டு கிடக்கும் ஒரு தொழிற்சாலை வளாகம் முழுவதும் கருவேல மரங்களாக அடர்ந் வனம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வனத்தை விட்டு வெளியில் வரும் யானை கூட்டங்கள் இந்த வளாகத்திலேயே எப்போதும் முகாமிட்டு இருக்கும்.
இன்று காலை வனத்தை விட்டு வெளியில் வந்த யானைகள் கூட்டம் அந்த தொழிற்சாலை வளாகத்துக்கு சென்றது. பின்னர் சிறிது நேரம் அங்கு நின்றிருந்த யானைகள் அங்கிருந்து சாலையை கடந்து அருகே உள்ள தோட்டங்களை நோக்கி படையெடுத்தது.
யானைகள் வந்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் யானைகள் சாலையை கடப்பதை பார்த்து, செல்போனில் புகைப்படம் எடுத்தனர். யானைகள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் சர்வசாதாரணமாக சாலையை கடந்து சென்றன. தொடர்ந்து இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் இங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.