செய்திகள்
ஆந்திராவில் பள்ளி நிர்வாகம் முழுக்க ஈஷாவுக்கு வழங்கப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்
ஆந்திர அரசாங்கம் அம்மாநிலத்தில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த பள்ளிகளின் நிர்வாகத்தை ஈஷாவிடம் ஒப்படைத்து இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த பள்ளிகள் நிர்வாகம் முழுவதையும் ஈஷா பவுன்டேஷனுக்கு வழங்கிவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அம்மாநிலத்தின் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் திறமையை கண்டறிந்து அவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் தகவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட இணைய தேடல்களில் ஆந்திர அரசு இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. முன்னதாக மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை கட்டமைக்க ஆந்திர அரசு 400 ஏக்கர் நிலத்தை ஈஷா பவுன்டேஷனுக்கு ஒதுக்க திட்டமிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலத்தின் சுமார் 460 அரசு பள்ளிகளை மேம்படுத்த இருப்பதாக ஈஷா பவுன்டேஷன் சார்பில் ஜக்கி வாசுதேவ் தெரிவித்து இருந்தார். எனினும், சமீபத்தில் ஆந்திர அரசு பள்ளி நிர்வாகத்தை ஈஷா பவுன்டேஷனுக்கு வழங்குவது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.