விளையாட்டு
ரபேல் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ரபேல் நடால்

Published On 2022-01-28 07:37 GMT   |   Update On 2022-01-28 07:37 GMT
நடால் 6-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதில் ஒரே ஒருமுறை மட்டுமே பட்டத்தை வென்றுள்ளார்.
மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலையில் முதல் அரை இறுதி நடந்தது. இதில் 6-ம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்), 7-ம் நிலை வீரர் பெரேட்டினி (இத்தாலி) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் முதல் 2 செட்டை ரடால் கைப்பற்றினார். 3-வது செட்டை பெரேட்டினி தன்வசப்படுத்தினார். 4-வது செட்டை ரபேல் நடால் எளிதாக கைப்பற்றினார். முடிவில் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

அவர் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மெட்விதேவ் அல்லது கிரீசின் சிட்சிபாஸ் ஆகியோரில் ஒருவருடன் மோத உள்ளார்.

ரபேல் நடால் 21-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடால் 6-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒரே ஒருமுறை (2009-ம் ஆண்டு) வென்றுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி நாளை மதியம் 2 மணிக்கு நடக்கிறது. பட்டத்துக்கான இப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

கடந்த ஆண்டு விம்பிள் டன் பட்டத்தையும் 2019-ம் ஆண்டுபிரெஞ்ச் ஒபன் பட்டத்தையும் வென்ற ஆஸ்லே பார்டி 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவர் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந் துள்ளார்.

30-வது இடத்தில் உள்ள காலின்ஸ் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Tags:    

Similar News