செய்திகள்
பணம் பறிமுதல்

நெல்லையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த 3 பேர் சிக்கினர்

Published On 2021-04-05 08:17 GMT   |   Update On 2021-04-05 08:17 GMT
ராதாபுரம் தாசில்தார் முகமது யூசுப் தலைமையிலான பறக்கும்படையினர் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக தகவல் கிடைத்தது.

நெல்லை:

சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் சிறப்பு பறக்கும்படை குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்திலும் 15 பறக்கும் படை மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளம் பகுதியில் நேற்று நள்ளிரவில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்து சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது வைராவிகிணறு கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் பறக்கும்படையினரை பார்த்ததும் அங்கிருந்து வேகமாக கிளம்பினார். உடனே அவரை பறக்கும் படையினர் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் அதே கிராமத்தில் மேலத்தெருவை சேர்ந்த ராஜா(வயது 40) என்பது தெரியவந்தது.

அ.தி.மு.க. பிரமுகரான அவரிடம் ரூ.80 ஆயிரம் பணமும் இருந்தது. இதனால் அவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க அந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என்று சந்தேகித்த பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கூடங்குளம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக வழக்குப் பதிவு செய்து ராஜாவிடம் விசாரித்து வருகிறார்கள்.

ராதாபுரம் தாசில்தார் முகமது யூசுப் தலைமையிலான பறக்கும்படையினர் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் முன்னீர் பள்ளம் பகுதியில் சோதனை செய்தபோது 2 பேர் பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் தமிழாக்குறிச்சியை சேர்ந்த சாமுவேல்(35), ஆபிரகாம்(43) என்பதும், அவர்கள் அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சாமுவேல், ஆபிரகாம் ஆகியோர் மீது முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News