செய்திகள்
தேர்தல் கமிஷன்

மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்பட்டது - தேர்தல் கமிஷன்

Published On 2021-04-14 19:22 GMT   |   Update On 2021-04-14 19:22 GMT
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகின்றன. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நேற்று பிரசாரம் ஓய்ந்தது.

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகின்றன. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

இதில் வடக்கு 24 பா்கானாக்கள், டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.



இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 39 பேர் பெண்கள் ஆவர்.

இவர்களின் அரசியல் எதிர்காலத்தை 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வருகிற 17-ந்தேதி நிர்ணயிக்கிறார்கள். இதற்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த தொகுதிகளில் கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் மம்தா பானர்ஜி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

இதைப்போல பா.ஜனதா சார்பில் கட்சியின் தேசிய தலைவர் ேஜ.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பல்வேறு தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி சார்பிலும் பல்வேறு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் களைகட்டியிருந்தது.

மாநிலத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) மாலையில்தான் முடிவடைய வேண்டும். ஆனால் மேற்கு வங்காள தேர்தல் களம் தொடக்கம் முதலே ெபரும் பதற்றமும், பரபரப்பும் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே வெறுப்பு பேச்சுகள், ஆத்திரமூட்டும் உரைகள், தேர்தல் நடத்தை விதிமீறும் சம்பவங்கள் என பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனால் தலைவர்களின் பிரசாரத்துக்கு தடை விதிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

அந்தவகையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கே 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருந்தது. மத மோதலை உருவாக்கும் பேச்சுகளுக்காக இந்த தடை அமல்படுத்தப்பட்டது.

அது மட்டுமின்றி கடந்த 4-ம் கட்ட வாக்குப்பதிவின்போது சிட்டால்குச்சியில் வன்முறை நிகழ்ந்ததால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தும் நிலை ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அதேநேரம் மற்றொரு வாக்குச்சாவடியில் பா.ஜனதா தொண்டர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவங்களால் மாநிலத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

எனவே 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பிரசாரத்துக்கும், வாக்குப்பதிவுக்கும் இடையேயான இடைவெளியை மேலும் 24 மணி நேரம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி அங்கு 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் அனைத்தும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
Tags:    

Similar News