வழிபாடு
பொள்ளாச்சியில் தேர்த்திருவிழாவையொட்டி கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி பெண்கள் வழிபட்ட போது எடுத்த படம்.

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

Published On 2022-02-25 03:07 GMT   |   Update On 2022-02-25 03:07 GMT
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வெள்ளி தேர்த்திருவிழாவையொட்டி கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.
பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. பின்னர் பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

இதனால் பக்தர்கள் கூட்டம் காரணமாக கடை வீதியில் மாரியம்மன் கோவில் வழியாக கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தடையை மீறி வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் தடுப்புகளை தள்ளி வைத்து விட்டு கார், ஆட்டோக்கள் சென்று வருவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே போலீசார் கோவில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபடுவார்கள். வருகிற 1-ந் தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து 4-ந்தேதி முதல் விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந்தேதி காலை 10 மணிக்கு கோவிலில் கொடியேற்று விழா நடைபெறுகிறது. 8-ந்தேதி இரவு அபிஷேகம் நடக்கிறது. வருகிற 9-ந்தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3 நாட்கள் தொடர்ந்து வெள்ளித்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். இந்த நாட்களில் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

10-ந்தேதி 2-ம் நாள் தேரும், 11-ந்தேதி 3-ம் நாள் தேரும் வீதி உலா வந்து நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது. 12-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 14-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
Tags:    

Similar News