செய்திகள்

வெனிசுலா அதிபரை கொல்ல முயற்சி- எதிர்க்கட்சி எம்.பி.க்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு

Published On 2018-12-05 07:30 GMT   |   Update On 2018-12-05 07:30 GMT
வெனிசுலா அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் எதிர்க்கட்சி எம்பி மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. #NicolasMaduro #JuanRequesens
கராகஸ்:

வெனிசுலா தலைநகர் கராகசில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி ராணுவம் மற்றும் தேசிய படைகளின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அதிபர் நிகோலஸ் மதுரோ பங்கேற்று உரையாற்றியபோது அவரை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

வெடிகுண்டுகளுடன் வந்த 2 ஆளில்லா விமானங்கள் வெடித்து சிதறியபோது, பாதுகாப்பு படை வீரர்கள் அதிபரை சூழந்து கொண்டு அவரை பாதுகாத்தனர். இதனால் அதிபர் மதுரோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பல வீரர்கள் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய சபையின் துணைத்தலைவரும், ஜஸ்டிஸ் பர்ஸ்ட் கட்சி எம்பியுமான ஜுவான் ரிகொசன்ஸ் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


இவ்வழக்கு வரும் 18ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்தல், குற்ற சதி, பயங்கரவாதம் உள்ளிட்ட  6 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் இந்த குற்றங்கள் நிரூபணமானால் ஜுவான் ரிகொசன்சுக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. இத்தகவலை அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். #Venezuela #NicolasMaduro #JuanRequesens
Tags:    

Similar News