பண்ணாரி கோவில் அருகே லாரி மீது மினிலாரி மோதல்- டிரைவர் நசுங்கி பலி
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி ஒரு மினிலாரி சென்று கொண்டிருந்தது. லாரியை கோவையை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) என்பவர் ஓட்டி சென்றார். அருகில் மற்றொரு டிரைவரான பல்லடத்தை சேர்ந்த கருப்புசாமி அமர்ந்திருந்தார்.
இன்று அதிகாலை மினிலாரி ஈரோடு மாவட்டம் பண்ணாரி கோவில் அருகே வந்தபோது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
இதில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மினிலாரி மோதியது. இதில் மினிலாரியின் முன்பகுதி நொருங்கியது.
மினிலாரியில் இருந்த மாற்று டிரைவர் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார். வண்டியை ஓட்டி வந்த டிரைவர் சந்தோசும் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் கருப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.