செய்திகள்
கோப்புபடம்

கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்தவரால் பரபரப்பு

Published On 2020-09-15 11:33 GMT   |   Update On 2020-09-15 11:33 GMT
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:

கொரோனா ஊரடங்கின் காரணமாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு மனுக்கள் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தொலைபேசி வாயிலாக திங்கட்கிழமை தோறும் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை கோரிக்கைகளை தெரிவிக்கவும், வாட்ஸ்-அப், இ-மெயிலில் மனுக்களை அனுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிடையாக வந்து மனுக்கள் அளிக்க பொதுமக்கள் பலர் திங்கட்கிழமை தோறும் வருகைதருகிறார்கள். இதனால் மனுக்களை இலவசமாக எழுதி கொடுக்க வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை விசாரித்து கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ஒருவர் தீக்குளிக்க பாட்டிலில் பெட்ரோலுடன் வந்தார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, பெட்ரோல் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் தீக்குளிக்க வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று எச்சரித்தனர். மேலும் கார்த்திக் மீது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெட்ரோலுடன் தீக்குளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News