செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2021-11-25 04:37 GMT   |   Update On 2021-11-25 04:37 GMT
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடலூர்:

வங்கக்கடலில் இலங்கை அருகே தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுநிலையாக உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. நள்ளிரவில் கடலூர், முதுநகர், மஞ்சக்குப்பம், புதுநகர், திருப்பாதிரிபுலியூர், வண்டி பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போதுதான் மழை வெள்ளம் வடிந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News