ஸ்லோகங்கள்
சிவன்

திருமந்திரப் பாடலும் விளக்கமும்...

Published On 2021-12-28 06:25 GMT   |   Update On 2021-12-28 06:25 GMT
திருமந்திர பாடல் ஒவ்வொன்றும், சிவனின் அன்பையும், அவருடைய இருப்பையும், அவரால் கிடைக்கும் பேரின்பத்தையும் பற்றி எடுத்துரைக்கின்றன. அந்த சிறப்புக்குரிய திருமந்திரப் பாடல்களை பார்க்கலாம்.
பாடல்:-

உரையற்று உணர்வற்று உயிர்பரமற்று
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

விளக்கம்:-

சிவபெருமான் நம்மை ஆட்கொண்ட நிலையில், பேச்சு இன்றி போனது, உணர்வு அற்று போனது, உயிர் சிவனோடு வேறுபாடு அற்று ஒன்றிப்போனது. கடலும், அலையும் வேறில்லை என்பது போன்ற நிலை உண்டானது. எல்லையற்ற நுண்ணோசை, நினைவோசை, குரல்வளை ஓசை, செவியோசை ஆகிய நான்கு சத்தங்களை கடந்து விளங்கும் சிவனருளில் சேர்ந்து அதனை நுகரப் பெற்றுப் பேசாதநிலை எய்தினோம்.

பாடல்:-

பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திறவாதே..

விளக்கம்:-

பச்சிம திக்கு எனப்படும் மேற்கு திசை நோக்கி தன்னுடைய மாணவனை அமரச் செய்யும் குருவானவர், அந்த திசையில் இருந்தபடியே நாள்தோறும் சிவனை நினைத்து வரும்படி உத்தரவிடுவதோடு, ஈசனை வழிபடுவதற்கான மந்திரத்தையும் உபதேசம் செய்துவைப்பார். அந்த சிவன் இருக்கும் இடமானது, நம்முடைய வாய் உச்சரிக்கும் ஈசனின் திருநாமத்தில்தான். சிவனை விட்ட நீங்காத நிலை பெற்ற பின்பு, ஒருவருக்கு மீண்டும் பிறப்பு உண்டாகாது.

பாடல்:-

அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
மகார உகாரம் இரண்டும் அறியில்
லகார உகாரம் இலிங்கமது ஆமே.

பொருள்:-

உலகத்தையும், அதில் வாழும் உயிர்கள் அனைத்தையும் தாங்குபவராக சிவபெருமான் இருக்கிறார். அவர் அகரமாய் நிற்கிறார். அகரமாக இருக்கும் சிவபெருமானின் திருவருட் சக்தியானது, உகாரமாய் நம்மிடம் உயிர்ப்பு வடிவில் நிற்கும். இப்படி சிவம், சக்தி இருவரும் நம்மிடம் அகரமாகவும், உகரமாகவும் இருப்பதை அறிந்துகொண்டோம் என்றால், அந்த இரண்டும் இணைந்த குறியீடே சிவலிங்கம் என்பதை உணர்ந்து தெளிய முடியும்.
Tags:    

Similar News