செய்திகள்
பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டமாட்டோம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
கொரோனா தடுப்பூசி செயல்முறை முடியும் வரை எந்தவொரு விசயத்திலும் அவசரம் காட்டமாட்டோம் என டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. தற்போது 2-வது அலை அம்மாநிலத்தில் கட்டுக்குக்குள் வந்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 77, 72 என்ற நிலையிலேயே உள்ளது.
இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் 3-வது அலை எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் பள்ளிகளை திறப்பதில் டெல்லி அரசு அவசரம் காட்டாது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘சர்வதேச அளவிலான போக்குகள், கொரோனா தொற்றின் 3-வது அலை விரைவில் தாக்கலாம் என்பதை காட்டுகின்றன. இதனால் பள்ளிகள் தற்போது திறக்கப்படாது. தடுப்பூசி நடைமுறை முடியும் வரையில், எந்தவொரு கடினமான முயற்சியையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை’’ என்றார்.
டெல்லியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட 18 முதல் 45 வயதுடையோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துள்ளனர்.