நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
நாகர்கோவில்:
நித்திரவிளை அருகே தூத்தூர் வட்டவிளாகத்தை சேர்ந்தவர் ராபின் (வயது 50). இவரது மனைவி தன்யா (45). இவர்களது மகன் ரோஜின் (21). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் தாய் தன்யாவை ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக அழைத்துச் சென்றார். கலிங்கராஜபுரம் அருகே சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தன்யா எதிர் பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் தன்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தன்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராபின் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் இன்பராஜ் ஆகியோர் ரோஜின் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.