செய்திகள்
இந்திய ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான் பதுங்கு குழிகள், வெடிமருந்து கிடங்குகள் அழிப்பு- வீடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்

Published On 2020-11-14 04:59 GMT   |   Update On 2020-11-14 04:59 GMT
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை அழித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி: 

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட இந்த உடன்பாட்டை பாகிஸ்தான் ராணுவம் ஒருபோதும் மதிப்பது இல்லை. அங்குள்ள இந்திய ராணுவ நிலைகளையும், மக்கள் வாழும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து அடிக் கடி அத்துமீறிய தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

மேலும் அங்கு பயிற்சி பெற்று காத்திருக்கும் பயங்கரவாதிகளை இந்தியாவின் அமைதியை சீர்குலைப்பதற்காக காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வதற்காக இந்திய படைகளை திசை திருப்பவும் இத்தகைய தந்திரங்களை அது மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கோழைத்தனமான அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. இந்திய எல்லை பகுதிகளை சீண்டுவதும், அதற்கு இந்திய வீரர்கள் கடுமையான பதிலடி கொடுப்பதும் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் அவ்வப்போது பலியாகி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதல்கள் நேற்று எல்லை மீறிப்போனது. அங்கு கடந்த சில நாட்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் தாக்குதல்களை பாகிஸ்தான் நேற்று அரங்கேற்றியது. காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் தொடுத்தது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
 
பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்களைப் போன்ற ஆயுதங்கள் கொண்டு இந்திய வீரர்கள் சரமாரியாக பதிலடி கொடுத்தனர். பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், சிறிய ரக பீரங்கிகள் என நவீன ஆயுதங்கள் மூலம் வலிமையான பதில் தாக்குதலை இந்திய வீரர்கள் அரங்கேற்றினர். இதில் பாகிஸ்தான் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டது.

அவர்களின் ஏராளமான ஆயுத கிடங்குகள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் பல்வேறு பயங்கரவாத பயிற்சி தளங்கள் என ஏராளமான உடைமைகளும் நாசமாக்கப்பட்டன.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். குப்வாரா மாவட்டத்தின் கெரன் செக்டாரில் நிகழ்ந்த இந்த அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்கே திரும்ப சென்றனர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் மற்றும் அதற்கு இந்திய வீரர்களின் வலிமையான பதிலடி போன்ற நடவடிக்கைகளால் காஷ்மீர் எல்லையில் நேற்று பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து எல்லை முழுவதும் இந்திய படைகள் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையே மிகவும் தீவிரமான எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடந்து உள்ளன. 

இந்திய இராணுவம் இதுகுறித்து பதிவிட்டு உள்ள  பல வீடியோக்கள் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பல பாகிஸ்தான் முகாம்கள் அழிக்கப்பட்டதைக் காட்டுகின்றன.

பாகிஸ்தானிய வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கட்டிடங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் ஊடுருவ முயற்சிக்க பயங்கரவாதிகளுக்கான ஏவுதளங்கள் ஆகியவை அடங்கி உள்ளன.

மற்றொரு வீடியோவில், இந்திய இராணுவத்தால் சுடப்பட்ட ஒரு டாங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை ஒரு பதுங்கு குழியை நோக்கி பறக்கும்போது ஒரு பாகிஸ்தான் சிப்பாய் பாதுகாப்பிற்காக வேகமாக ஓடுவதைக் காண முடிகிறது. சில நொடிகளில், இந்திய இராணுவத்தால் ஏவப்பட்ட மேலும் இரண்டு ஏவுகணைகள் ஒரே பதுங்கு குழியைத் தாக்கின.

கெரான் துறையிலிருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஊடுருவல் முயற்சியை இந்திய படைகள் தடுத்து நிறுத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இது ஒரு வாரத்திற்குள் இரண்டாவது ஊடுருவல் முயற்சியாகும் நவம்பர் 7-8 அன்று மச்சால் பகுதியில் ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Tags:    

Similar News