உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டு (கோப்புப்படம்)

2001 மாடுபிடி வீரர்கள்-4,544 காளைகள் பதிவு: அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு

Published On 2022-01-13 11:14 GMT   |   Update On 2022-01-13 11:14 GMT
வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பர். ஆனால் இந்த ஆண்டு 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
அவனியாபுரம்:

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3-வது நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுதினமும், அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது.

அதன்படி ஒரு போட்டியில் 300 வீரர்கள், 700 காளைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது, போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் பதிவு நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 5 மணி வரை நடைபெற்றது.

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். 3 ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மொத்தம் 2,001 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் 4,544 காளைகளும் அதன் உரிமையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு போட்டியில் 300 வீரர்கள் மற்றும் 700 காளைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு 2 மடங்கு அதிகமான வீரர்கள் பதிவு செய்துள்ளனர். போட்டியில் பங்கேற்க சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்படும் வீரர்கள் குறித்த விவரம் அந்தந்த வீரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்வாகும் வீரர்கள் போட்டியில் பங்கேற்க வரும்போது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மாடுபிடி வீரர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை (14-ந்தேதி) நடைபெறுகிறது. போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் திருப்பரங்குன்றம் சாலையின் இருபுறங்களிலும் சவுக்கு கம்புகளால் ஆன பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காளைகள் வெளியேற குருநாதன் கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் மற்றும் போட்டியை நடத்தும் அதிகாரிகள் அமர்வதற்காக திருப்பரங்குன்றம் சாலையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியில் இன்று தென்னை நார் கொட்டப்பட்டது.

மேலும் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால் வழக்கத்தைவிட கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பர். ஆனால் இந்த ஆண்டு 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மிகவும் குறைவான அளவில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News