செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்கள் வந்து சேர்ந்தன
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. அதேசமயம், ஆக்சிஜன் பற்றாக்குறை கடும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், எளிதில் கொண்டு செல்லக்கூடிய 23 ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்கிறது.
இதேபோல் சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து மிக பிரமாண்டமான ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன்படி, இன்று சிங்கப்பூரில் இருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது. இந்த விமானம் இன்று இரவு மேற்கு வங்கத்தில் உள்ள பனகர் விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க இந்த நடவடிக்கைகள் மிகவும் உதவியாக இருக்கும்.