செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை படத்தில் காணலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாத 10 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-08-12 10:41 GMT   |   Update On 2021-08-12 10:41 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாத 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3¼ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து வாகனங்களான லாரி, வேன், சுற்றுலா வேன், பஸ், ஆம்னி பஸ் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு முறையாக அரசிற்கு ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை சாலை வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்தாத மற்றும் ஒரு ஆண்டிற்கு மேல் வரி செலுத்தாத கனரக வாகனங்கள் தொடர்ந்து சாலையில் இயங்கி வருகின்றன. சாலை வரி செலுத்துவது குறித்து வாகன உரிமையாளர்களுக்கு உரிய கால அவகாசம் மற்றும் நோட்டீசு அனுப்பியும், தொடர்ந்து சாலை வரி செலுத்தாமல் இயங்கி வருவதாக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் சென்றன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெரம்பலூர், குன்னம், பாடாலூர், வாலிகண்டபுரம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன சோதனையில் சாலை வரி செலுத்தாத 6 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், மங்களமேடு போலீஸ் நிலைய வளாகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. 2 பொக்லைன் எந்திரங்கள், 2 இலகு ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாடாலூர் போலீஸ் நிலையத்திலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்கு உரிய சாலை வரியை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் வரி செலுத்தாத வாகனங்கள் தொடர்ந்து சாலையில் இயக்கினால் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News