செய்திகள்

கொடநாடு குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது- மேத்யூஸ்

Published On 2019-01-23 10:14 GMT   |   Update On 2019-01-23 10:14 GMT
கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் தெரிவித்தார். #SamuelMathew #KodanadEstate
சென்னை:

கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கொடநாடு கொள்ளை குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மேத்யூஸ் இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடநாடு கொள்ளை மற்றும் அதன்பின் நடந்த கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், சென்னையில் வக்கீல்களை சந்திக்க வந்துள்ளேன்.

சயான், மனோஜ் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. என் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.


தமிழக அரசு மீது நான் குற்றம் சாட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.

கொடநாடு விவகாரத்தில் செய்தியாளராக நான் எனது பணியை முழுமையாக செய்தேன். இந்த குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.

கொடநாடு கொள்ளை, அதன்பின் கொலைகள் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை சொல்வது எடப்பாடி பழனிசாமியின் கடமை.

கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி உள்ளார். ஆனால் என்னிடம் மேலும் ஆதாரங்கள் உள்ளன. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #SamuelMathew #KodanadEstate
Tags:    

Similar News