செய்திகள்
முகாமில், பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட காட்சி.

திண்டுக்கல்லில் முதல்முறையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2021-04-11 17:59 GMT   |   Update On 2021-04-11 17:59 GMT
திண்டுக்கல்லில் முதல்முறையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இவற்றுக்கு மக்கள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். எனினும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும்படி கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாநரகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் முகாம் நடத்தி தடுப்பூசி போடும்படி கமிஷனர் பாலசுப்பிரமணி அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து முதல்முறையாக திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தில் நேற்று பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமை தாங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் செபாஸ்டியன், அரசு மருத்துவர் முத்துக்குமார் மற்றும் மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

இதில் அந்த பகுதியை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உள்ளிட்ட பிற அமைப்பினர் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News