ஆன்மிகம்
குரு பார்க்கக் கோடி நன்மை என்று சொல்ல காரணம்
‘குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும்’ என்பதால்தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கிரகப்பெயர்ச்சிகளில், குருப்பெயர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். ‘நவக்கிரகங்களில் சுப கிரகம்’ என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்குத் திருவருள் கிடைக்கும். அந்த குரு பகவான், சுபஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30-ந் தேதி (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.36 மணிக்கு உத்ராடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு பெயர்ச்சியானார்.
மகர ராசி குரு பகவானுக்கு நீச்ச வீடாகும். இருப்பினும் அவரது பார்வை பலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார். ‘குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும்’ என்பதால்தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.
‘தனகாரகன்’ என்றும், ‘புத்திரகாரகன்’ என்றும் குருவைச் சொல்வார்கள். ஒருவருக்கு புத்திர பாக்கியம் கிடைத்து திருப்தியான வாழ்க்கை வாழ வேண்டுமானாலும், செல்வச் செழிப்பு மிக்கவராக விளங்க வேண்டுமானாலும் குரு வின் அருள்தான் வேண்டும். அதுமட்டுமல்ல திருமணம் கைகூட வேண்டுமானாலும் குரு பகவான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சாதகமான இடத்தில் குரு பகவான் அமர்ந்தால், அவர் செல்வாக்கு பெற்றவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பவராகவும் விளங்குவார்.
இப்பொழுது மகரத்தில் வந்திருக்கும் குரு பகவான் நீச்சம் பெறுகின்றார். அதே நேரத்தில் குருவும், சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள்.
டிசம்பர் 26-ந் தேதி சனி பகவான் பெயர்ச்சியாகி மகரத்திற்குச் சென்ற பிறகு, நீச்சம் பெற்ற வியாழனோடு இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது.
இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் 5.4.2021 முதல் 13.9.2021 வரை அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் அதிசாரமாக கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். மீண்டும் மகர ராசிக்கு மாறுதலாகி வந்து 13.11.2021 வரை சஞ்சரிக்கின்றார். இதற்கிடையில் 16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். எனவே அந்தந்த காலங்களுக்கு ஏற்பவும், உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடம் மற்றும் திசா, புத்தி அடிப்படையிலும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
பொதுவாக இந்தப் பெயர்ச்சியில் குருவின் பார்வை பெறும் மூன்று ராசிகள்: ரிஷபம், கடகம், கன்னி
குரு பார்வை தன ஸ்தானத்தில் பதியும் ராசி: மேஷம்
குரு பார்வை லாப ஸ்தானத்தில் பதியும் ராசி: விருச்சிகம்
குரு பார்வை தொழில் ஸ்தானத்தில் பதியும் ராசி: தனுசு
மேற்கண்ட ராசிகள் அனைத்திற்கும் தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும், தொகை வரவும் திருப்தி தரும்.
குருப்பெயர்ச்சி நாளில் இல்லத்து பூஜையறையில் ‘வானவர்க்கு அரசனான வளம்தரும் குருவே’ என்ற குரு கவசப் பாடலைப் பாடுவதோடு, குரு பகவான் படத்திற்கு மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி, முல்லைப்பூ மாலை அணிவித்து இனிப்புப் பொருள் நைவேத்தியம் வைத்து வழிபடுவது நல்லது.
மகரத்திற்கு ஜென்ம குருவாகவும், மிதுனத்திற்கு அஷ்டமத்து குருவாகவும், துலாத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், கும்பத்திற்கு விரய குருவாகவும், சிம்மத்திற்கு ரோக ஸ்தான குருவாகவும் இந்த குருப்பெயர்ச்சி அமைகிறது. எனவே மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுயஜாதக அடிப்படையில், பாக்கிய ஸ்தானத்திலுள்ள கிரகத்தின் பலமறிந்து அதற்குரிய ஆலயங் களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்றநாளில் பொருத்தமான வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
வழிபாட்டின் மூலம் வருமானப் பற்றாக்குறை அகலும். திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பொதுவாழ்வில் புகழ், இழந்த பதவியைப் பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற அனைத்தையும் வரவழைத்துக்கொள்ள இயலும். குருவருள் இருந் தால் சாதாரணமானவர்கள் கூட சக்கரவர்த்தியாக மாறமுடியும்.