ஏரியில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி - மற்றொரு மாணவனை தேடும் பணி தீவிரம்
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் வடக்கு முசிறி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் சிவசக்திவேல் (வயது 14) இவர் ஆலத்தூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த பூமிநாதன் மகன் கமலேஸ் (11) 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் நேற்று மாலை அதே பகுதியில் ஒரு மரத்தில் நாவல்பழம் பறித்து விட்டு அருகே உள்ள கருப்பேறியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கால்தவறி இருவரும் ஏரிக்குள் விழுந்தனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் தத்தளித்து கொண்டிருந்தனர்.
இதில் சிவசக்திவேல் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். கமலேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை மாணவன் சிவசக்திவேல் உடல் மதுக்கூர் வடக்கு கருப்பேறி கரையில் பிணமாக கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிவசக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மற்றொரு மாணவர் கமலேஷ் என்ன ஆனார்? என்பது குறித்து தெரியாததால் தீயணைப்பு துறையினர் ஏரியில் குதித்து கமலேசை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஏரியில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.