செய்திகள்
கொலை

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை

Published On 2021-04-29 10:44 GMT   |   Update On 2021-04-29 10:44 GMT
உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாப்பிள்ளை. இவர் உடல் நலக்குறைவால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் பிரேமா(வயது 20). 10-ம் வகுப்பு முடித்துள்ள இவர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் பின்புறம் அருகில் உள்ள புதர்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேமாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரேமாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணையில் பிரேமாவும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள அம்மையகரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலா(30) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பிரேமாவின் தாய் மலருக்கு தெரியவரவே அவர் தனது மகளை கண்டித்ததோடு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறினார். இதில் மனமாற்றம் அடைந்த பிரேமா தனது காதலை கைவிட்டு தாய் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்துகொள்ளவும் முடிவுசெய்தார். இதை அறிந்து கொண்ட பாலா இளம்பெண்ணை பலமுறை நேரில் சந்திக்க முயற்சி செய்ததோடு தன்னை காதலிக்கும்படி அவரை வற்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

காதலிக்க மறுத்த பிரேமாவை அவரது காதலனே கூலி ஆட்களை அனுப்பி வெட்டி கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News