செய்திகள்
23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நாகையை சேர்ந்த 23 தமிழக மீனவர்கள் கடந்த 11-ம் தேதி 2 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை கடல் பகுதியில் கைது செய்துள்ளனர். அவர்களது இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காரைநகரில் உள்ள கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரால் அடிக்கடி மேற்கொள்ளப்படும் கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்திலேயே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, நீங்கள் உடனே இவ்விவகாரத்தில் தலையிட்டு 23 மீனவர்களின் விடுதலையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் இன்று 1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு