செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு பலியான மாணவன் சரண்.

தாளவாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2019-09-13 05:44 GMT   |   Update On 2019-09-13 05:44 GMT
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் கர்நாடகா மாநில எல்லையையொட்டி உள்ள தாளவாடியை சேர்ந்தவர் மஞ்சுநாத். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி பெயர் சுஜதா.

இவர்களது மகன் சரண் (வயது 7). தாளவாடி அருகே தொட்ட காஜனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 20 தினங்களுக்கு முன் மாணவன் சரணுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவனை தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் மாணவனுக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவனுக்கு 5 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மாணவன் சரண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

மாணவன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது. அவனது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்று கொண்டு உறவினர்கள் இன்று தாளவாடி திரும்பினர்.

டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் தாளவாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, ‘‘தாளவாடி பகுதியில் சுற்றுப்புறத்தை மிகவும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். சுகாதார குழுவினர் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கேட்டு கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News