சிறப்புக் கட்டுரைகள்
கோப்பு படம்

வெளிநாட்டு வாழ்க்கை வரமா?- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

Published On 2021-12-28 09:40 GMT   |   Update On 2021-12-28 09:40 GMT
நில, புலன் என பெரிய வாழ்வாதாரம் இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் உழைத்து சம்பாதிக்கும் தொகையை குறுகிய காலத்தில் வெளிநாட்டில் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தாய் மண்ணை விட்டு கடல் கடக்க விரும்புகிறார்கள்.


சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா? என்பது பழைய கூற்று. உள்நாட்டில் முதலாளியாக இருந்தாலும் வெளிநாட்டு தொழிலாளியாக சம்பாதித்து வாழ்வதே பாக்கியம் என்பது புதிய கூற்று. படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைவரும் வெளிநாட்டு காற்றை சுவாசிப்பதையே விரும்புகிறார்கள். பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் உள்ள முக்கியமான புராதன நினைவிடங்களைச் சுற்றிப் பார்க்கவும், இந்திய வளங்களை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கவும் மட்டுமே இந்தியா வருகிறார்கள்.

நமது நாட்டில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளிநாட்டுக் கம்பெனிகள். இந்திய வளங்களையும், மக்கள் சக்தியையும் தங்களுக்கு சாதகமாக்கி பெரும் பொருளை தங்கள் நாட்டிற்கு இந்தியாவில் காலடி வைக்காமலேயே அள்ளிச் செல்கிறார்கள். பல கார்பரேட் நிறுவனங்கள் 5 ரூபாய் முதலீட்டில் கோடான கோடி இந்திய வளத்தை அள்ளி செல்கிறார்கள். இந்திய வளத்தின் தன்மையையும் மக்கள் சக்தியின் மகத்துவத்தையும் உணர்ந்தவர்கள் வெளிநாட்டினர்.

உலகின் பல அறிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமானவர்கள் இந்தியர்களாக இருந்தாலும் கூட அந்த கண்டுபிடிப்பில் நவீன யுக்தியை பயன்படுத்தி சந்தைப்படுத்தியவர்கள் வெளிநாட்டவர்கள். அதாவது இந்தியர்களின் மூளையையும் உழைப்பையும் அதிகம் பயன்படுத்துபவர்கள் வெளிநாட்டவர்கள். இந்தியர்கள் தான் வெளிநாட்டு வேலை மோகத்தில் தங்கள் உழைப்பை விரயம் செய்கிறார்கள்.

வெளிநாட்டு வாழ்க்கையை விரும்புகிறார்கள். வெளிநாட்டவர்கள் இந்திய வளத்தையும் இந்தியர்களின் கண்டுபிடிப்பையும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதாவது அந்நியர்கள் புத்தியைத் தீட்டி பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள். அதனால் தான் டாலரின் மதிப்பு அதிகமாகவும் இந்திய பணத்தின் மதிப்பு குறைவாகவும் உள்ளது. ஆனால் நம் நாட்டவர்கள் உழைப்பாளிகள். பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் தந்திரம் அறியாதவர்கள்.


 

நில, புலன் என பெரிய வாழ்வாதாரம் இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் உழைத்து சம்பாதிக்கும் தொகையை குறுகிய காலத்தில் வெளிநாட்டில் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தாய் மண்ணை விட்டு கடல் கடக்க விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.

ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்கின்றனர் . ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தாலும் சில ஆண்டுகளில் சொந்த ஊர் திரும்பி விடுகின்றனர். சிலர் வெளிநாட்டில் வணிகம் செய்து பல கோடி சம்பாதிக்கிறார்கள். பலர் பன்னாட்டு வியாபாரத்தில் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு வெளிநாட்டு விமானம் ஏறுவதற்கு கூட யோகம் இருப்பதில்லை. அந்நிய தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு பிழைப்பிற்காக வருபவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் நம் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு பிழைக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர குறைந்த பாடு இல்லை. வெளிநாட்டிற்கு சென்று கழிவறையைச் சுத்தம் செய்து கூட ஜீவனம் நடத்துவதை கவுரவமாக நினைக்கும் பலர் சொந்த நாட்டில் கொட்டிக் கிடக்கும் வேலையைச் செய்ய தயங்குகிறார்கள்.

வெளிநாட்டிற்குச் சென்று பிழைப்பு நடத்த யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால் சுய ஜாதகத்தில் தசா புத்தி சுபத் தன்மையோடு 1,8, 9, 12-ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெற்றால் மட்டுமே வெளிநாட்டு வாழ்க்கை வசந்தமாகும். மற்றவர்களுக்கு அந்நிய வாசம் என்பது சிறை தண்டனையாகவும் மீளமுடியாத இழப்பையும் மட்டுமே தருகிறது. வெளிநாடு செல்வதற்கான ஜோதிட ரீதியான கிரக அமைப்பைக் காணலாம்.

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு 9, 12-ம் அதிபதிகள் சம்பந்தம் இருந்தால் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழும் யோகம் உண்டாகும். ஒருவர் பிறந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்து செல்ல வேண்டுமானால் சந்திரன், குரு, சனிக்கு ராகு-கேது சம்பந்தம் இருக்க வேண்டும்.

லக்னத்திற்கு 12-ல் சந்திரன் அல்லது லக்னத்திற்கு 9, 12-க்குடைய அதிபதிகள் நீர் தத்துவ ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நின்றால் ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு செல்வார். ரி‌ஷபம், சிம்மம், விருச்சிகம், கும்ப லக்னத்திற்கு 9-ம் வீடு சர ராசி. 12-ம் வீடு ஜல ராசி. 9, 12-ம் அதிபதியுடன் சந்திரன் அல்லது குரு அல்லது சனி சம்பந்தம் பெற்றால் வெளிநாடு வாய்ப்பு அதிகம்.

கால சர்ப்ப யோகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவிற்கு இடையே நின்று அந்த அமைப்பில் 2-ல் ராகு 8-ல் கேது நின்றால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. ராகு-கேதுவின் அச்சின் ஒரு புறம் சனியும் மறுபுறம் குருவும் இருந்தால் வெளிநாடு செல்வார்.

லக்னாதிபதி விரயஸ்தானம் எனும் 12-ம் இடத்துடன் பலமாக தொடர்புகொள்ளும்போது ஜாதகர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து மறைவார். லக்னாதிபதி, பாக்கியஸ்தானம் எனப்படும் 9-ம் இடத்தில் பலத்துடன் தொடர்புகொள்ளும்போது சிறிது காலம் வெளிநாட்டில் வாழ்ந்து பிறகு சொந்த ஊருக்கு திரும்பிவிடுவார்.

குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் இரண்டாம் அதிபதி பாக்கியஸ்தானம் எனப்படும் 9-ம் அதிபதியுடன் அல்லது விரயஸ்தானம் எனப்படும் 12-ம் இடத்துடன் பலமாக தொடர்புகொள்ளும்போது ஜாதகருக்கு வெளிநாட்டு பயணம் உறுதியாக அமையும். இரண்டாம் இடத்தில் சனி-ராகு அல்லது நீச்ச கிரகங்கள் பங்கமின்றி அமையும்போது ஜாதகர் வளர்ந்த குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்து மறைவார்.

லக்னாதிபதி, 2-ம் அதிபதி 12-ம் இடத்துடன் சம்பந்தம் அடையும்போது அல்லது ராகு, சனி போன்றோர் 12ம் இடத்துடன் சம்பந்தம் அடையும்போது ஜாதகருக்கு இறுதி வரை வெளிநாட்டு வாசம் உறுதி. நான்காம் இடம் தாய், தாய்மொழி, தாய்நாடு போன்றவற்றை குறிக்கும் . நான்காம் இடத்தில் லக்ன ரீதியான 3, 8-ம் அதிபதிகள் நின்றால் தாய் நாடு மற்றும் உற்றார் உறவுகளுடன் பிரிவை உண்டாக்கி வெளிநாட்டு வாழ்க்கையை நிச்சயம் கொடுக்கும்.

இயற்கை பாவ கிரகங்களான சனி-ராகு, கேது போன்றோர் 2,4 ,7 , 9 , 12 ஆகிய இடங்களுடன் சம்பந்தம் அடையும் போது வெளி நாட்டு பயணம், வெளிநாட்டு வாழ்க்கை உறுதி. பொதுவாக வெளிநாடு செல்பவர்கள் சுற்றுலா, படிப்பு, சொந்தத் தொழில், உத்தியோகம் என்ற இந்த நான்கு காரணங்களுக்காகவே செல்வார்கள்.

சுற்றுலா கோட்சாரத்தில் சந்திரனுக்கு 9,12-ம் இடங்களில் சனி, குரு அல்லது ராகு கேதுக்கள் வரும் காலங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டாகும். அல்லது வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடன் குறுகிய காலம் தங்குவார்கள்.

கல்வி வித்தியாகாரகன் புதனுக்கு 3,9,12-ம் அதிபதிகள் சம்பந்தம் இருந்தால் கல்விக்காக வெளிநாடு சென்று வரலாம்.

சுய ஜாதகத்தில் 5-ம் அதிபதி 12-ல் இருந்தால் கல்லூரிப் படிப்பிற்கும், 9-ம் அதிபதி 12-ல் இருந்தால் முதுநிலை ஆராய்ச்சி மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்லும் இந்த அமைப்பினர் படிப்பை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்புவார்கள். 5, 9-ம் அதிபதியுடன் லக்ன ரீதியான அஷ்டமாதிபதி பாதகாதிபதி சம்பந்தம் இருந்தால் படிப்பை முழுமையாக தொடரமுடியாத நிலையில் பூர்வீகம் திரும்புவார்கள்.

உத்தியோகம் 6,8,12-ம் அதிபதிகள் சந்திரனுடன் அல்லது 10-ம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் 6, 8, 12-ம் அதிபதியின் தசா, புத்தி காலத்தில் வெளிநாட்டில் சம்பாதித்து நல்ல பொருளாதாரத்துடன் தாய் நாடு திரும்புவார்கள்.

நீர் தத்துவ ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ராசியில் ஒன்பதாம் அதிபதியுடன் சனி, 10-ம் அதிபதி சேர்ந்திருந்தால் ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். 3, 7-ம் அதிபதிகள் 9, 10-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெற்றால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். 10-ம் அதிபதி வக்ரம் பெற்றால் அல்லது 10-ம் பாவத்திற்கு 6. 8, 12-ம் அதிபதிகளின் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் நிரந்தரமாக ஒரே இடத்தில் பணிபுரிய முடியாமல் பல நாடுகள் அல்லது பல கம்பெனிகளில் பணிபுரிவார். அல்லது குறுகிய காலத்தில் தாயகம் திரும்புவார்கள். 9-ம் அதிபதி 9-ல் ஆட்சி உச்சம் பெற்று வக்ரம் அடைந்தால் அல்லது ராகு/கேதுவுடன் சேர்ந்து நின்றால் அயல்நாடு சென்று வரலாம். ஆனால் நீண்ட காலம் தங்க முடியாது.

ராசிக்கு 7-ம் இடம் ஸ்திர ராசியாக இருந்து 7-ல் செவ்வாய், சனி இணைந்து நின்றால் ஜாதகர் பிறந்த மண்ணிற்கு திரும்பவும் வராமல் அங்கேயே தங்கி விடுவார். உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீன லக்னத்தைச் சேர்ந்தவர்கள் வெளி நாட்டிற்குச் சென்றால் தாயகம் திரும்ப விரும்புவதில்லை. குடியுரிமை பெற்று அங்கேயே தங்கி விடுவார்கள். வெகு சிலர் சொந்த நாட்டிற்கு வர விரும்பினாலும் திரும்ப முடியாத சூழ்நிலை உண்டாகும்.

12-ம் அதிபதி 7-ல் இருந்தால் வெளிநாட்டில் திருமணம், வெளி நாட்டவரை மணப்பார் அல்லது வெளிநாட்டு குடியுரிமை பெற்றவரை மணப்பார். மேலே கூறிய அமைப்புகள் இருந்து 8-ம் அதிபதி 7-ல் அல்லது 6-ம் அதிபதி 7-ல் நின்றால் ஜாதகர் வெளிநாடு சென்றவுடன் வேலை போய் விடும். அல்லது நிரந்தர வேலையின்றி சிரமத்தை சந்திப்பார். இக்கால கட்டத்தில் 8ம் அதிபதியின் தசை, புத்தி நடந்தால் வெளிநாட்டில் இருந்து திரும்புவது சிரமம். 8ம் அதிபதியின் தசை என்றாலே உள்ளுர் ஜெயிலுக்கு பதில் வெளிநாட்டு வாய்ப்பு.

தொழில் 3 , 7, 9, 12-ம் அதிபதிகளின் சம்பந்தம் அல்லது 9, 10, 12-ம் அதிபதிகள் சம்பந்தம் இருந்தால் வெளிநாட்டில் தொழில் செய்யும் யோகம் உண்டாகும். 6-ம் அதிபதி 12-ல் இருந்து 10-ம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் ஏற்றுமதி- இறக்குமதி தொழில் மூலம் வெளிநாடு சென்று வருவார்.

மனித வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பாக்கிய ஸ்தானம் எனும் 9-ம் இடமே நிகழ்த்துகிறது. இதை பேச்சு வழக்கில் ‘வாங்கி வந்த வரம்’ என்றும் ஜோதிட மொழியில் ‘பிராப்தம்’ என்றும் கூறுவார்கள். நாம் இருக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது நாலாம் இடம் அந்த வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான மூன்றாம் வீடு இடப்பெயர்ச்சியை குறிக்கிறது, நீண்ட தூரப்பயணம் ஒன்பதாமிடத்தை குறிக்கும்.

12-ம் இடம் வெளிநாட்டு பயணத்தையும் கூறும். ஆக 3, 9 ,12-ம் இடத்தை குறிக்கின்ற கிரகங்களின் தசா புத்தி காலத்தில் தான் ஒருவர் வெளிநாடு போக முடியும்

வெளிநாட்டு வாழ்க்கை வரமா? ஒருவர் தனித்தோ குடும்பமாகவோ வெளிநாடு செல்லும் போது சொந்த பந்தங்களை உறவுகளை பிரிந்து செல்ல வேண்டும். குடும்பத்தில் நடைபெறும் சுப அசுப நிகழ்வுகளில் கலக்க முடியாது. நம் சொந்த மண்ணில் விளைந்த மணம் நிறைந்த உணவுகள் கிடைக்காது. அவசர காலங்களில் உதவிக்கு உறவுகள் இருக்க மாட்டார்கள். வெளிநாட்டிற்கு செல்ல நாம் இருக்கும் இடத்தில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாத இடம், மனிதர்களுடன் வாழ வேண்டும்.

இது போன்ற பல அசவுகரியங்கள் இருக்கும். ஆனால் பணம் இருக்கும். பலர் பணமும் இல்லாமல் கடன் சுமையில் தாயகம் திரும்பவும் முடியாமல் வெளிநாட்டில் வாழவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஆக வெளிநாட்டு வாழ்க்கை வெகு சிலருக்கே சாத்தியம். பலரின் வெளி நாட்டு வாழ்க்கை நிம்மதியற்ற நிலையிலையே இருக்கிறது. வெளிநாட்டு வாழ்க்கைக்கு அல்லது வெளிநாட்டு குடியுரிமைக்கு ஆசைப்படும்போது முதலில் சுய ஜாதகம் வலுவாக இருக்கிறதா என்று கவனித்த பின்னர் இறங்கவும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் , ஏன் நம்ப வேண்டும் வெளிநாட்டை?

உத்தியோகம், தொழில், கல்வி என வெளிநாட்டு வாய்ப்பில் தடை தாமதம் இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையான ராகு வேளையில் இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகங்களின் சிலைக்கு மஞ்சள், குங்குமம், செவ்வரளி சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

வெளிநாடு சென்று சொந்த நாடு திரும்ப முடியாமல் சங்கடங்களை அனுபவிப்பவர்கள் தங்களின் பூர்வீக ஊரில் உள்ள எல்லை அல்லது காவல் தெய்வத்தை மானசீகமாக வழிபட விருப்பம் நிறைவேறும்.

Tags:    

Similar News