செய்திகள்
மதுரையில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் - ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது
மதுரையில் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மண்டலத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் திருநகர் மெயின் ரோட்டில் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு வேனில் சோதனை நடத்தியதில் 3 ஆயிரம் கிலோ ரேசன் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு கண்ணன் (வயது 24), திருப்பரங்குன்றம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த ரமேஷ் (35), சிந்து பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (38) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான ரமேஷ், மூர்த்தி ஆகிய 2 பேரும் ரேசன் கடை ஊழியர்கள் ஆவர். இது தவிர திருநகர் ரேசன் கடை விற்பனையாளர் அண்ணாதுரையிடமும் விசாரணை நடந்து வருகிறது.