ஆன்மிகம்
சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்ததை காணலாம்.

திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2019-10-31 05:30 GMT   |   Update On 2019-10-31 05:30 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 3-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

6-ம் நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News