செய்திகள்
பிரதமர் மோடியிடம் இந்தியாவுக்கு சொந்தமான 157 கலைப்பொருட்கள் ஒப்படைப்பு
இந்தியாவுக்குச் சொந்தமான கலைப்பொருட்களை திருப்பி ஒப்படைத்ததற்காக அமெரிக்காவுக்கு தனது பாராட்டை பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம், குவாட் உச்சி மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவரிடம் இந்தியாவுக்கு சொந்தமான, அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 157 கலைப்பொருட்கள், பழம்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்து மதம் சார்ந்த 60 சிலைகள், புத்த மதத்தின் 16 மற்றும் சமண மதத்தின் 9 சிலைகள் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியான அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சொந்தமான கலைப்பொருட்களை திருப்பி ஒப்படைத்ததற்காக அமெரிக்காவுக்கு தனது மிகுந்த பாராட்டை மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டு இந்தியாவுக்கு திரும்பிவரும் அரிய கலைப்பொருட்களில், 12-வது நூற்றாண்டைச் சேர்ந்த நுணுக்கமான வேலைப்பாட்டைக் கொண்ட வெண்கல நடராஜர் சிலையும் அடங்கும்.
இதையும் படியுங்கள்....விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு